UPDATED : பிப் 02, 2026 08:04 PM
ADDED : பிப் 02, 2026 08:05 PM

சென்னை:
கிராமிய கலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில், கிராமிய கலைகள் சார்ந்த ஓவிய கண்காட்சி, எழும்பூரில் உள்ள லலித் கலா அகாடமியில், ஏழு நாள் கண்காட்சி நேற்று துவங்கியது.
நாடு முழுதும் இருந்து, 49 ஓவியக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 100க்கும் மேற்பட்ட, கண்கவர், கிராமிய மணம் வீசும் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. 2,000 ரூபாய் முதல் 3.5 லட்சம் ரூபாய் வரை விலையுள்ள ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
சிறப்பு விருந்தினர்களாக, தமிழக இயல், இசை, நாடக மன்ற செயலர் விஜயா தாயன்பன், பேராசிரியர்கள் ராஜசேகரன் மற்றும் வசந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், விஜயா தாயன்பன் பேசுகையில், “கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவ தற்காக, பல முன்னெடுப்புகளை, நாடக மன்றம் செய்து வருகிறது. அந்த வகையில், கிராமிய கலை சார்ந்த ஓவியங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்,” என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காயத்ரி ராஜா கூறுகையில், “கிராமிய கலைஞர்களை கவுரவிக்கவும், கலைஞர்களை ஓவிய வடிவில் காண வேண்டும் என்ற நோக்கிலும், இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. கிராமிய கலைஞர்களின் தனித்துவத்தை, கண்காட்சியில் காணலாம்,” என்றார்.
கண்காட்சியை காலை 11:00 முதல், இரவு 7:00 மணி வரை, இலவசமாக பார்வையிடலாம்.

