அரசு கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.9.12 லட்சம் ஊக்கத்தொகை
அரசு கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.9.12 லட்சம் ஊக்கத்தொகை
UPDATED : பிப் 26, 2026 02:46 PM
ADDED : பிப் 26, 2026 02:49 PM

கடலுார்:
கடலுார் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் 4 பேர், விளையாட்டுத் துறையில் தமிழக அரசின் உயரிய ஊக்கத்தொகை, 9.12 லட்ச ரூபாயை பெற்று சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தேசிய அளவிலான சாதனைகளின் அடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் லோகேஸ்வரன், சுதர்ஷன், ஸ்ரீகாந்த், போஸ் ராஜகுரு ஆகியோர் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கங்கள் குவித்தனர்.
அதனடிப்படையில் சென்னை நேரு அரங்கில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணைமுதல்வர் உதயநிதி மாணவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர். மாணவர் லோகேஸ்வரனுக்கு 4 லட்ச ரூபாயும், சுதர்ஷனுக்கு 2 லட்ச ரூபாயும், ஸ்ரீகாந்திற்கு 2 லட்ச ரூபாயும், போஸ் ராஜகுருவிற்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகைக்கான செக் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
தமிழக அரசின் உயரிய ஊக்கத்தொகை பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர், துறைத்தலைவர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டினர்.
அதில் மாணவர் லோகேஸ்வரன், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பதக்கங்களை பெற்றதன் அடிப்படையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அவரை இரண்டு ஆண்டுகளுக்கு தத்தெடுத்து, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்பதாக அறிவித்துள்ளது.
பயிற்சியாளர் மகேஷ்பாபு கூறுகையில், தமிழ்நாட்டில் இவ்விளையாட்டில் முதன்முதலாக தத்தெடுக்கப்பட்டுள்ள வீரர் இவர் தான் எனக் கூறினார்.

