தேசத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்லும் பட்ஜெட்
தேசத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்லும் பட்ஜெட்
UPDATED : பிப் 02, 2026 08:13 PM
ADDED : பிப் 02, 2026 08:14 PM
கோவையை சேர்ந்த ஆடிட்டர் கார்த்திகேயன், தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து கூறியதாவது:
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நீண்ட கால இலக்கை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட். இந்தியா தொடர்ந்து நான்காவது ஆண்டாக சுமார் ஏழு சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து, உலக நாடுகளிலேயே அதிக வளர்ச்சி கொண்டதாக இருந்து வருகிறது.
உள்கட்டமைப்புக்கு அதிக அளவாக ரூபாய் 12.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ரயில், விமானம், டிஜிட்டல் மற்றும் சமூக உட்கட்டமைப்பு முதலீடுகளா இந்நிதி பயன்படுத்தப்படும். நீண்ட கால வளர்ச்சிக்கு வலுவூட்டும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. பயோ டெக்னாலஜி, செமி கண்டக்டர் உள்ளிட்ட பல துறைகளில் புதிய தொழில்கள் உருவாகவும், வளர்ந்து வரும் தொழில் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் இந்த பட்ஜெட் வழிவகுத்துள்ளது. என்.ஆர்.ஐ.,களை இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. இது ஒரு முன்னோக்கான அணுகுமுறை.
ஏழு புதிய பாஸ்ட் டிராக் ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, நாட்டின் இணைப்புத் திறனை அதிகரிக்கும்; பொருளாதார செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இத்தகு திட்டங்கள் தனியார் துறை முதலீடு செய்யும் நம்பிக்கை அதிகரிக்கின்றன. முதலீட்டாளர்களுக்கு தேவையான நம்பிக்கையை அளிக்கும் பட்ஜெட்டாக இதை கூறலாம்.
வெளிநாட்டு சுற்றுலா செலவு, மருத்துவத்திற்கும் மேல் படிப்பிற்கும் வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பணத்தில் டி.சி.எஸ்., விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து மற்றும் இருபது சதவீதமாக இருந்த டி.சி.எஸ்., இரண்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டங்களில் சிறை தண்டனை விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் முதல் தேதி நடைமுறைக்கு வரும். இறக்குமதி வரிகளில் சாதகமான மாற்றங்கள், வியாபாரத்தை எளிமையாக செய்ய எடுத்துள்ள முயற்சிகள் குறுகியகாலத்தில் மட்டுமன்றி, நீண்ட கால பலன்களை அளிக்கக் கூடியவையாகவும்; தொழில்முனைவோர், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்கும். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லும் பட்ஜெட்.
இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.

