பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு வாழ்க்கை: நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் விருப்பம்
பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு வாழ்க்கை: நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் விருப்பம்
UPDATED : ஜன 20, 2025 12:00 AM
ADDED : ஜன 20, 2025 09:13 AM
சென்னை:
நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு நுாற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள, அவரது வீட்டில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழக பிரிவு சார்பில், நேற்று நுாலகம் திறப்பு விழா நடந்தது.
நுாலகத்தை திறந்து வைத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய, விடுதலை 2 படம் பார்த்தேன். அப்படத்தில், தலைவர் முக்கியமல்ல; தத்துவம் தான் முக்கியம் என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. அதில், எனக்கு உடன்பாடில்லை. கார்ல் மார்க்ஸ் தத்துவத்தை, லெனின், குருசேவ் போன்ற தலைவர்களும் பின்பற்றினர். கோர்பசேவ் காலத்தில் மார்க்ஸ் தத்துவம் என்ன நிலையானது என்பது எல்லோருக்கும் தெரியும்.
தத்துவத்தை விட நல்ல தலைவர்கள் தேவை. நீதித்துறை முதல் அனைத்து துறைகளிலும் ஆளுமைகள் குறைந்து கொண்டே வருகின்றன. ஆளுமை மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
பொதுவுடைமை தத்துவத்திற்கு இலக்கணமாக நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார். அவரது தன்னலமற்ற பொதுசேவையை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்.
ஒரு மனிதர் இறந்த பிறகு, அவரது மரபணுக்களை இன்னொருவருக்கு செலுத்தி, அதை செயல்பட வைக்கலாமா என, ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இது வெற்றி பெற்றால், நல்லகண்ணு போன்றோரின் மரபணுக்களை சேகரித்து, அதை வருங்கால சந்ததியருக்கு செலுத்த வேண்டும். நல்லகண்ணு வாழ்நாளுக்கு பிறகு, அவரது மூளையை எடுத்து இன்னொருவருக்கு பொருத்தி பார்க்கும் வகையில், அறிவியல் வளர்ச்சி உருவாக வேண்டும்.
இது சாத்தியமானால், ஆயிரம் நல்லகண்ணுகளை உருவாக்க வேண்டும். இதன் வாயிலாக இந்த சமுதாயம் பயன் பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.