மண்ணின் மணம் வீசும் கிராமிய விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி
மண்ணின் மணம் வீசும் கிராமிய விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி
UPDATED : மார் 02, 2026 10:12 AM
ADDED : மார் 02, 2026 10:14 AM

புதுச்சேரி:
இயற்கை சூழ்ந்த கிராமங்கள் உள்ளத்தின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் நினைவுகளை மெதுவாகத் தட்டி எழுப்பும். அந்த அழைப்பை கலை வடிவமாக மாற்றியிருக்கும் ஓவியக் கண்காட்சி தற்போது புதுச்சேரி அருங்காட்சியகம் அருகில் உள்ள சமகால ஓவிய அரங்கில் துவங்கி நடந்து வருகிறது.
மண்ணின் மணத்தை மனதில் சுமந்து இந்த ஓவியங்களை உயிரூட்டியுள்ளவர் முனைவர் கோபால். குளத்தின் கரையில் வீசும் மாலை காற்று, வயல்வெளியில் தகதகவென ஒளிரும் சூரியன், வழிபாட்டு தலத்தின் முன் நிற்கும் மண்ணின் பக்தி என அவரது ஒவ்வொரு ஓவியமும் கிராமங்களில் உயிர்ப்பினை நமக்கு காட்டுகிறது. இவை மண்ணின் நினைவுகளை மீட்டெடுக்கும் ஓவியங்களாகவும் இருப்பது சிறப்பு.
புதுச்சேரி சுற்றியுள்ள தவளக்குப்பம், ஏம்பலம், கூட்ரோடு, மாத்துார், நத்தமேடு, திருக்காஞ்சி, ஆரோவில், பொறையூர் போன்ற கிராமங்களுக்கு நேரில் சென்று, அங்கேயே அமர்ந்து அந்த இயற்கை அமைப்புகளை ஓவியமாக வடிவமைத்து, அப்படியே கேலரியில் காட்சிக்கு வைத்துள்ளார். இந்த ஓவியங்கள் மண்ணின் வாசம் வீசும் நினைவுகளாக, கிராம மக்களின் இயற்கை உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகிய சாட்சிகளாகவும் திகழ்கின்றன.
முனைவர் கோபால் கூறுகையில், 'நம் தமிழ் பண்பாட்டில், நீர்நிலைகள் ஒரு குளமாக மட்டும் இல்லாது வாழ்க்கையின் மூலமாக இருந்தன. வழிபாட்டு தளங்கள் ஒரு கோவிலாக மட்டும் அல்லாது, சமூகத்தின் ஆன்மிக இதயமாக இருந்தன.
அய்யனாரப்பன் உருவங்கள் ஒரு சிலையாக மட்டும் இல்லாது, கிராமத்தின் காவல் நிழலாக இருந்தன. ஆனால் காலப்போக்கில், நவீன வளர்ச்சியின் பெயரில் இவ்வளவையும் நாம் மெதுவாக இழந்து வருகிறோம். அந்த இழப்பின் வலியை உணர்த்தும் விதமாக, இந்த ஓவியங்கள் அமைதியாக பேசுகின்றன.
இந்த ஓவியங்கள் பார்ப்பதற்கானவை மட்டும் அல்ல. உணர்வதற்கானவை. இவை நம் மண்ணின் மவுனக் கதைகள், நம் முன்னோர்களின் வாழ்வியல் தத்துவத்தின் சித்திரங்களாக பிரதிபலிக்கின்றனர். இவை நம் எதிர்கால சந்ததியினருக்கான விழிப்புணர்வு அழைப்பாக கூட கருதலாம் என்றார்.
இந்த விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி வரும் 5ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வைக்கு திறந்திருக்கும். மண்ணின் பெருமையை ஓவியங்களால் உணர அரிய வாய்ப்பு.

