கல்வித்துறையில் தொகுப்பூதிய முரண்பாடுகளை களைய வேண்டும் கணக்காளர் சங்க பொது செயலாளர் வலியுறுத்தல்
கல்வித்துறையில் தொகுப்பூதிய முரண்பாடுகளை களைய வேண்டும் கணக்காளர் சங்க பொது செயலாளர் வலியுறுத்தல்
UPDATED : ஏப் 11, 2025 12:00 AM
ADDED : ஏப் 11, 2025 08:58 AM

மதுரை:
கல்வித்துறையில் பல்வேறு நிலைகளில் வழங்கப்படும் தொகுப்பூதியங்களில் உள்ள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணா கணக்காளர்கள் சங்க பொது செயலாளர் இல.பிரபு தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
இத்துறையில் ஏற்கனவே இருந்த எஸ்.எஸ்.ஏ., திட்டமும், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டமும் இணைக்கப்பட்டு தற்போது சமக்ர சிக் ஷா (எஸ்.எஸ்.,) செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்திற்கான நிதியை மத்திய- மாநில அரசுகள் வழங்குகின்றன. இத்திட்டத்தில் மாநில, மாவட்ட திட்ட அலுவலர்கள், அமைச்சு பணியாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என நிரந்தர பணியாளர்கள் உள்ளனர்.
இவர்கள் தவிர 1995 சிறப்பாசிரியர்கள், 12,105 பகுதிநேர ஆசிரியர்கள், 757 கணக்காளர்கள், 376 கணினி ஆபரேட்டர்கள், 187 கட்டட பொறியாளர்கள் உட்பட 1428 பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு நிலைகளில் தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் நடைமுறையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அதாவது ஒரே அடிப்படை கல்வித் தகுதியில் ஒரே பணிநிலையில் பணியாற்றுவோருக்கு வெவ்வேறு தொகுப்பூதியம் வழங்குவது ஏற்புடையது அல்ல. இதனால் அவரவர் பணிநிலை, அடிப்படை கல்வித் தகுதிக்கு ஏற்ப ஒரே மாதிரியான உயர்ந்தபட்ச தொகுப்பூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் ஆண்டுதோறும் மூத்த 500 ஆசிரியர் பயிற்றுநர்கள், அரசு பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்ய வேண்டும் என்றார்.

