பேராசிரியர்கள் பதவி உயர்வு நிறுத்தம் பல்கலை பதிவாளர் மீது குற்றச்சாட்டு
பேராசிரியர்கள் பதவி உயர்வு நிறுத்தம் பல்கலை பதிவாளர் மீது குற்றச்சாட்டு
UPDATED : மார் 07, 2026 01:17 PM
ADDED : மார் 07, 2026 01:19 PM

சென்னை:
பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு ஆணையை, காழ்ப்புணர்ச்சி காரணமாக, பல்கலை பதிவாளர் நிறுத்தி வைத்துள்ளதாக, சென்னை பல்கலை ஆசிரியர் பேரவை குற்றம்சாட்டி உள்ளது.
சென்னை பல்கலையில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு நேர்காணல், பல்கலை வளாகத்தில், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது. அதற்கு, சிண்டிகேட் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதில், தேர்வான பேராசிரியர்களுக்கு, பதவி உயர்வு ஆணை வழங்கப்படவில்லை என, குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
தணிக்கை உட்பட பல்வேறு காரணங்களை கூறி, பதவி உயர்வு ஆணை வழங்குவதை, பல்கலை நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக, அரசின் தலைமை செயலருக்கு, பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக, தேசிய பட்டியலின ஆணைய தலைவர், பல்கலை வளாகத்தில் நேரடியாக விசாரணை நடத்தினார். அதன் பிறகும், பல்கலை பதிவாளர் பதவி உயர்வு ஆணையை வழங்காமல், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக, சென்னை பல்கலை ஆசிரியர் பேரவை குற்றம்சாட்டி உள்ளது.
பதிவாளரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, வரும் 9ம் தேதி முதல், பல்கலை வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும், ஆசிரியர் பேரவை அறிவித்துள்ளது.

