UPDATED : மார் 07, 2026 01:16 PM
ADDED : மார் 07, 2026 01:17 PM

சென்னை:
'பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்திய நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்யாமல், சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும்' என, கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 184 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 8,741 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, 25,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு நிர்ணயித்தபடி, 57,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 9 முதல் 25ம் தேதி வரை, பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கவுரவ விரிவுரையாளர் களுக்கு 5,000 ரூபாய் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், பேராட்டம் நடத்திய 17 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யாமல், பிப்ரவரி மாதத்துக்கான ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

