தேவை கூடுதல் வகுப்பறை : மரத்தடியில் அமர்ந்து அவதிப்படும் மாணவர்கள்
தேவை கூடுதல் வகுப்பறை : மரத்தடியில் அமர்ந்து அவதிப்படும் மாணவர்கள்
UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 09:51 AM

திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லாமலிருப்பதால் மாணவர்கள் மரத்தடி,சமூதாய கூடங்களில் அமர்ந்து படிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி கூடுதல் வகுப்பறைகளை அமைக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் ஏராளமான அரசு பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். மழை நேரத்தில் மழையில் நனைந்தவாறு சமூதாய கூடங்களில் அமர்ந்து படிக்கின்றனர். இதனால் மாணவர்கள் மட்டுமில்லாமல் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் பாதிக்கின்றனர். கல்வித்துறை அதிகாரிகள் அடிக்கடி பள்ளிகளில் ஆய்வு செய்கின்றனர். ஆனால் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருப்பதால் மாணவர்கள் ஆண்டுக்கணக்கில் அவதிப்படுகின்றனர்.
இதோடு மட்டுமில்லாமல் சில பள்ளிகளில் காம்பவுண்ட் சுவர்கள் இல்லாமல் திறந்தவெளியில் உள்ளது. இங்கு இரவு நேரத்தில் மது பிரியர்கள் புகுகின்றனர். மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே விட்டு செல்கின்றனர். காலையில் வரும் மாணவர்கள் அதில் விழிக்கும் நிலை ஏற்படுகிறது. சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. ஆடு,மாடுகள் உள்ளே வந்து தங்கள் பங்குக்கு மரங்கள்,செடிகளை சேதப்படுத்துகின்றன. கல்வித்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து எந்தந்த பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்பதை கணக்கிட்டு உடனே கூடுதல் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.
நடவடிக்கை எடுங்க அரசு
வழக்கறிஞர் பாலசந்தர் கூறுகையில், பள்ளிகளில் வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதால் பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு மாற்றும் நிலை வந்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் அரசு பள்ளிகளின் நிலை என்னவாகும் என்பதை கல்வித்துறை அதிகாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். பல ஏழை மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்து கொண்டிருக்கிறார்கள். நம் மாவட்டத்திலும் அதேபோல் பலரை உருவாக்க வேண்டும் என்பதில் கல்வித்துறை கவனம் செலுத்த வேண்டும் என்றார்.