ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
UPDATED : பிப் 17, 2026 02:23 PM
ADDED : பிப் 17, 2026 02:26 PM

புதுச்சேரி:
புதுச்சேரி ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் (சி.எம்.ஏ., இண்டர்) தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
கல்லுாரியில் 2025 - 26ம் கல்வியாண்டில் 2ம் ஆண்டு பயிலும் 7 மாணவர்களும், 3ம் ஆண்டு பயிலும் 24 மாணவர்களும் சி.எம்.ஏ., இண்டர் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் பி.காம்., பட்டம் முடிப்பதற்கு முன்பாகவே 37 மாணவர்கள் சி.ஏ., இண்டர், சி.எம்.ஏ., இண்டர் முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை, கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்ய நாராயண அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி, கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
கல்லுாரி நிறுவனர் ஆனந்தன் கூறுகையில், “ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி நவீன காலத்திற்கு ஏற்ப உயர் கல்வியில் பல மாற்றங்களை கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர தொழில்நுட்பம், டேட்டா சயின்ஸ், விஷூவல் கம்யூனிகேஷன் போன்ற பாடங்களை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு இணையாக நடத்தி வருகிறது.
தேசிய அளவில் எச்.சி.எல் நிறுவனத்துடன் இணைந்து பல பயிற்சிகள் அளித்து 'மைனர் டிகிரி' நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. வணிகவியல் பாடத்துடன் இளங்கலை பட்டத்தோடு ஒருங்கிணைந்த சி.ஏ., சி.எம்.ஏ., ஏ.சி.சி.ஏ., போன்ற தொழில்முறை கல்விக்கான பாடங்களையம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறது,” என்றார்.

