UPDATED : மார் 04, 2026 11:27 AM
ADDED : மார் 04, 2026 11:28 AM
திருவாடானை:
திருவாடானை தாலுகாவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் முன்பெல்லாம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி திறக்கும் போது தான் மாணவர்களைச் சேர்ப்பார்கள். ஆனால், தனியார் பள்ளிகளுக்குப் போட்டியாக அரசுப் பள்ளிகளிலும் முன்கூட்டியே சேர்க்கையை துவக்க 2024 முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டும் மார்ச் மாதம் முதலே மாணவர் சேர்க்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
திருவாடானை தாலுகாவை சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
அரசுப் பள்ளிகள் என்றாலே ஏழை மாணவர்களுக்கானது என்ற எண்ணம் மாறிவிட்டது. இப்போது எங்கள் பள்ளிகளில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு வசதிகள் உள்ளன. எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் மாணவர்களின் கற்கும் திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழக அரசின் காலை உணவு திட்டம் பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், ஸ்மார்ட் வகுப்பறைகள், கல்வி உதவித்தொகை போன்ற திட்டங்கள் குறித்து நாங்கள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு, தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பாடம் நடத்துதல், சீருடை, புத்தகங்கள், காலணிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்குவது குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றனர். மாணவர் சேர்க்கை பணி துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

