UPDATED : மார் 04, 2026 11:23 AM
ADDED : மார் 04, 2026 11:25 AM
நாமக்கல்:
தமிழகத்தில் உள்ள கல்லுாரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக, 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.
இத்திட்டப்படி, முதல்கட்டமாக, 10 லட்சம் மடிக்கணினி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில் நுட்ப கல்லுாரி, தொழில்துறை பயிற்சி போன்ற அனைத்து துறைகள் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், முதுகலை, முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்திய மாணவர் சங்க மாவட்ட இணை செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார்.
தமிழகம் முழுவதும் படிக்கக்கூடிய கல்லுாரி மாணவர்களுக்கு, 'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தில் கீழ், இலவச மடிக்கணினி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம், முதுகலை மற்றும் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

