UPDATED : பிப் 10, 2026 01:25 PM
ADDED : பிப் 10, 2026 01:28 PM
உடுமலை:
அரசு மாதிரி பள்ளிகளில் பிப்., இரண்டாவது வாரத்தில், 2026 - 2027ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படும் வகையில் மாதிரி பள்ளிகள், மாவட்டத்துக்கு ஒன்று வீதம், 2022ல் துவங்கப்பட்டது.
நவீன உள்கட்டமைப்பு, உறைவிட வசதி, மற்றும் நீட், ஜே.இ.இ., போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி, உயர்கல்வியில் சேர ஊக்கம் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் மாதிரி பள்ளிகள் வழங்கி வருகிறது.
இத்தகைய பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை துவங்குவது வழக்கம். அவ்வகையில், மாதிரி பள்ளிகளில் பிப்., இரண்டாவது வாரத்தில், 2026 - 2027ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனரகம், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் மாதிரி பள்ளியில் சேர்க்க வேண்டிய மாணவர் குறித்த விபரம் சேகரிக்க வேண்டும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை பிப்., இரண்டாவது வாரமே துவங்க வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைத்து, மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்; அட்மிஷன் துவங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

