பல்லாயிரம் மாணவர்களை உருவாக்கிய அரசு பள்ளியின் நுாற்றாண்டு விழா
பல்லாயிரம் மாணவர்களை உருவாக்கிய அரசு பள்ளியின் நுாற்றாண்டு விழா
UPDATED : பிப் 10, 2026 01:28 PM
ADDED : பிப் 10, 2026 01:32 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், நுாற்றாண்டு விழா நடந்தது. தேவாலா பஜாரில் இருந்து, முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாத்தியங்களுடன், பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.
குஞ்சாம்பு நம்பியார் நினைவாக, கட்டப்பட்ட வரவேற்பு அரங்கத்தை, கட்டிய ஹரிஹரன் திறந்து வைத்தார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நுாற்றாண்டு சுடர் ஏற்றப்பட்டது. முன்னாள் தலைமை ஆசிரியர்கள் இணைந்து விழா கொடியினை ஏற்றி வைத்தனர். விழா குழு ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் சண்முகம் வரவேற்றார்.
தொடர்ந்து, மதியம் நடந்த நிகழ்ச்சிக்கு, முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, மாவட்ட கல்வி அலுவலர் சின்னமாது தலைமை வகித்தனர். கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன், எம்.எல்.ஏ., ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ., திராவிட மணி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
வட்டார கல்வி அலுவலர்கள் வனிதா, சரஸ்வதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். தலைமை ஆசிரியர் லதா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
முன்னாள் ஆசிரியர்கள் பேசுகையில், 'இந்த பள்ளியில் இது வரை, 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துள்ள நிலையில், பலரும் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளனர். மனித சமுதாயத்தில் தனிமனித வளர்ச்சியை கண்டு அனைவரும் பொறாமைப்படும் நிலையே தொடர்கிறது. ஆனால், தன்னிடம் படித்த மாணவன் உயர்ந்த நிலைக்கு வரும் போது, அதனை பார்த்து மகிழ்வதும், வாழ்த்தி பெருமைப்பட வைப்பதும் ஆசிரியர் சமுதாயம் மட்டும் தான்,' என்றனர்.
தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கோபிநாதன், சண்முகம், ஹரிஹரன், ஜெயக்குமார், வர்கீஸ், ஷாஜகான் தலைமையிலான, 40 பேர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர். ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

