UPDATED : பிப் 27, 2026 04:36 PM
ADDED : பிப் 27, 2026 04:37 PM
நெய்வேலி:
என்.எல்.சி., இந்தியா நிறுவனம் மற்றும் தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனமான (என்.பி.டி.ஐ.,) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி., இந்தியா நிறுவனம், அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, மத்திய மின் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மின்சக்தித் துறை பயிற்சிக்கான தேசிய அளவில் மிக உயரிய அமைப்பான தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்துடன் நேற்று நெய்வேலியில் உள்ள என்.எல்.சி., தலைமை அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
என்.எல்.சி., மனிதவளத் துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், சுரங்கம் மற்றும் சேவைகள் துறை செயல் இயக்குநர் ஜாஸ்பர் ரோஸ், மனிதவளத்துறை முதன்மை பொது மேலாளர் பங்கஜ் குமார் ஆகியோர் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில், என்.எல்.சி., பொதுமேலாளர் சரவணபவன், தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் சார்பாக அந்நிறுவன இயக்குனர் அமிர்தவள்ளி கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தமானது, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்திற்கு வீடு, நிலம் வழங்கிய திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள, வேலையற்ற இளைஞர்களுக்கும், மின் உற்பத்தி நிலைய பொறியியலில் ஓராண்டு கால வேலைவாய்ப்பு சார்ந்த 'போஸ்ட் டிப்ளமோ' படிப்பை வழங்கும்.
இந்தப் பயிற்சித் திட்டம், விண்ணப்பதாரர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு வழிவகுக்கும்.

