தினமலர் நுாலகத்தில் ஐந்து மணி நேரம் தொடர்ந்து புத்தகம் வாசித்த சோமசுந்தரம்
தினமலர் நுாலகத்தில் ஐந்து மணி நேரம் தொடர்ந்து புத்தகம் வாசித்த சோமசுந்தரம்
UPDATED : பிப் 27, 2026 02:37 PM
ADDED : பிப் 27, 2026 02:41 PM
பெங்களூரு:
தினமலர் நாளிதழின் கடல் தாமரை புத்தக பூங்காவிற்கு வந்த வாசகர், ஐந்து மணி நேரம் தொடர்ந்து புத்தகங்களை மெய்மறந்து வாசித்து வியப்பில் ஆழ்த்தினார்.
பெங்களூரு தினமலர் அலுவலகத்தின் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, தினமலர் வாசகரான சோமசுந்தரம், 63; நேற்று மதியம் 1:00 மணிக்கு வந்தார். தனக்கு பிடித்த 'அந்துமணியின் பா.கே.ப.,' புத்தகங்களை ஆர்வமாக எடுத்தார். மருத்துவ குறிப்பு, டாக்டர்களின் பதில் உள்ளிட்ட சில புத்தகங்களையும் எடுத்து வந்து, ஆர்வமாக வாசிக்க ஆரம்பித்தார். ஐந்து மணி நேரம் இருந்த இடத்தை விட்டு எழாமலும், கண்ணிமைக்காமலும் புத்தகங்களை வாசித்து வியப்பில் ஆழ்த்தினார்.
பின், அவர் கூறியதாவது:
என் சொந்த ஊர் வேலுார். பெங்களூரு ராமமூர்த்திநகரில் 15 ஆண்டுகளாக வசிக்கிறேன். எனக்கு 10 வயதாக இருக்கும் போதில் இருந்தே தினமும் நாளிதழ்கள், புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வைத்து உள்ளேன். சென்னையில் உள்ள கன்னிமாரா உட்பட பல நுாலங்களுக்கு சென்று, புத்தகங்களை வாசித்து இருக்கிறேன்.
அந்துமணியின் பா.கே.ப., புத்தகங்களை ஆர்வமாக படித்தேன். அதை கீழே வைக்க மனமே இல்லை. இங்கு நிறைய புத்தகங்களை கலெக் ஷன் செய்து வைத்து உள்ளீர்கள். உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம். புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்ததும் மெய்மறந்துவிட்டேன். இதற்கு இங்குள்ள அமைதியான சூழலும் ஒரு காரணம்.
பெங்களூரில் உள்ள நுாலகங்களில் தமிழ் புத்தகங்களை காண்பதே அரிதாக உள்ளது. இனி இங்கு வந்து வாசிப்பு தாகத்தை தீர்த்து கொள்ளலாம். நுாலகம் ஆரம்பித்த உடனேயே இங்கு வர வேண்டும் என்று நினைத்தேன். சில காரணங்களால் வர முடியவில்லை. ஒரு வழியாக இன்று வந்துவிட்டேன். இந்த நுாலகத்தை பற்றி எனக்கு தெரிந்த நண்பர்களிடமும் கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை 6:00 மணிக்கு நுாலகத்தில் இருந்து சிரித்தவாறே புறப்பட்டு சென்றார்.

