ஏ.ஐ., சென்சார் தொழில்நுட்ப வருகை உயர்தர ஆடை உற்பத்தி சாத்தியமாகும்
ஏ.ஐ., சென்சார் தொழில்நுட்ப வருகை உயர்தர ஆடை உற்பத்தி சாத்தியமாகும்
UPDATED : மார் 08, 2026 01:47 PM
ADDED : மார் 08, 2026 01:49 PM

திருப்பூர்:
பின்னலாடை நிறுவனங்களின், மூன்றாவது கண் என்று வர்ணிக்கப்படும், 'ஏ.ஐ., சென்சார்' தொழில்நுட்பத்தை, அரசு மானியத்துடன் செயல்படுத்தி, திருப்பூரில் உயர்தர ஆடை உற்பத்தியை சாத்தியமாக்கலாம் என, முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஏராளமான திட்டங்களில், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டமும் முக்கியமானது. அதாவது, ஜவுளி விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்பு திட்டம் என்ற பெயரில், ஆடை உற்பத்தி துறையினர் பயன்பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது, அடுத்த மாதத்தில் செயல்பாட்டுக்கு வரப்போகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, துணி உருவாக்கம், ஆடை வடிவமைப்புக்காக துணி வெட்டுதல், பிரின்டிங் அல்லது எம்பிராய்டரிங், ஆடை வடிவமைப்பு என, அனைத்து பிரிவுகளிலும், மூன்றாவது கண் என்று கூறப்படும் 'ஏ.ஐ.,' தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட உள்ளது.
பிரத்யேக இயந்திரமாக அல்லாமல், ஏற்கனவே இயங்கி வரும் இயந்திரத்தில் கூடுதலாக பொருத்தும் கருவியாக 'ஏ.ஐ.,' தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துவிட்டது. திருமுருகன்பூண்டி ஹைடெக் கண்காட்சியில் பார்வையாளர்கள், ஒவ்வொரு இயந்திரங்களுக்கும் கூடுதலாக பொருத்தியுள்ள 'ஏ.ஐ.,' தொழில்நுட்ப கண்காணிப்பு கருவிகளை கண்டு, வியந்து விசாரித்து வருகின்றனர்.
'நிட்டிங்' துவங்கி, 'பேக்கிங்' வரை, இது போன்ற புதிய தொழில்நுட்பத்தால் பலமடங்கு மேம்பட வாய்ப்புள்ளதாக தற்போது அனைவரின் நம்பிக்கையாக திகழ்கிறது.
துணி உற்பத்தி இயந்திரத்தில், கூடுதலாக பொருத்தும், 'ஏ.ஐ.,' சென்சார் வாயிலாக, சிறிய சேதம் ஏற்பட்டாலும், தொழிலாளர் கண்ணுக்கு தெரியும் முன்னதாகவே, 'கேமரா'வில் கண்டறிந்து, சரி செய்ய வழிகாட்டியாக இருக்கும்.
துரிதம்... துல்லியம்!
இயந்திர வடிவமைப்பு நிறுவன பிரதிநிதிகள் கூறியதாவது: இயந்திர உற்பத்தி மட்டுமல்ல, உற்பத்தி மதிப்பீடு தயாரிப்புக்கான 'ஏ.ஐ.,' வசதிகளும் வந்துவிட்டன. ஆர்டர் அடிப்படையில், கொள்முதல் செய்ய வேண்டிய நுாலின் அளவு; தொழிலாளர்களின் தேவை போன்ற அனைத்து விவரங்களையும் துல்லியமாக கணக்கிட முடியும்.
குறைபாடில்லா ஆடை உற்பத்தி தான் 'பிராண்டிங்' உருவாக்கத்துக்கான முதல்படி. அதற்கு, 'ஏ.ஐ., சென்சார்' கருவிகள் மிக மிக அவசியம். இத்தகைய குறைபாடுகளை தடுக்கும் கருவிகளை பொருத்துவதன் வாயிலாக, பின்னலாடை நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தியும், 20 சதவீதம் வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மத்திய பட்ஜெட் அறிவிப்பு, அடுத்த மாதத்தில் இருந்து படிப்படியாக நடைமுறைக்கு வரும். அடுத்த சில மாதங்களில், அரசு மானியத்துடன், 'ஏ.ஐ., சென்சார்' பொருத்துவது குறித்த திட்ட விவரங்கள் தெரியவரும்.

