UPDATED : நவ 23, 2025 08:02 AM
ADDED : நவ 23, 2025 08:04 AM

பெங்களூரு:
''விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த ஆண்டு சேவைக்கு வரும்,'' என, மாநில வேளாண் துறை இயக்குநர் ஜி.டி.புத்ரா கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நாட்டில் முதன் முறையாக, விவசாயிகளுக்கு உதவக்கூடிய வகையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இது, விவசாயத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து நிவர்த்தி செய்யும்.
இதை மாநில வேளாண் துறை, இஸ்ரோவுடன் இணைந்து கூட்டு முயற்சியில் செய்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் அடுத்த சில மாதங்களில் தயாராகிவிடும். அடுத்த ஆண்டு முதல் சேவைக்கு வரும்.
இந்த தொழில் நுட்பம் மூலம் விவசாயிகளின் மொபைல் எண்ணுக்கே பயிரிடுவது குறித்த அறிவுரைகள் வழங்கப்படும். இதை பயன்படுத்தி, விவசாயிகளும் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம்.
அறுவடையின்போது செய்ய வேண்டியவை, கூடாதவை, பயிரிடுதல் குறித்த அனைத்து தகவல்களும் வழங்கப்படும். இந்த தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு ஒரு தோழனாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

