தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்ய ஏ.ஐ. தொழில்நுட்பம்!
தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்ய ஏ.ஐ. தொழில்நுட்பம்!
UPDATED : ஜன 08, 2026 03:54 PM
ADDED : ஜன 08, 2026 03:56 PM

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், பாடங்களை எளிமைப்படுத்தி கற்பிக்கவும், செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ.தொழில்நுட்பம் பயன்படுத்துவது ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் கீழ் அடிப்படை மொழி மற்றும் கணிதப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களை எதிர்காலத் தேவைகளுக்கு தயார்படுத்த 'பியூச்சர் ரெடி' (Future Ready) எனும் திறன் மதிப்பீட்டு வினாத்தாள்கள், மாதாந்திர அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிய, மாநில கற்றல் அடைவுத் தேர்வுகள் (ஸ்லாஸ்) நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டாலும், கற்றலை இன்னும் எளிதாக்க 'சாட் ஜிபிடி' (ChatGPT), 'கூகுள் ஜெமினி' போன்ற ஏ.ஐ. கருவிகளை, ஆசிரியர்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, ஒரு பாடப்பகுதியைப் பதிவேற்றி, அதிலிருந்து ஒரு மதிப்பெண் வினாக்களை உருவாக்குவது, கடினமான பாடங்களை எளிமையான குறிப்புகளாக மாற்றுவது போன்ற பணிகளுக்கு, இத்தொழில்நுட்பம் பெரிதும் உதவுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாட ஆசிரியர்களும் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
தேர்வுகளில் 5 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கத் தயங்கும் மாணவர்களுக்கு, பெரிய விடைகளைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதப் பழக்க ஏஐ கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற கடினமான பாடங்களிலும், கணக்குப்பதிவியல் மற்றும் கணிதத்திலும் மாணவர்களை எளிதாகத் தேர்ச்சி பெறச் செய்ய, இத்தொழில்நுட்பம் துணையாக உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நீளமான விடைகளை 'கீ- பாயின்ட்ஸ்' மூலம் நினைவில் கொள்ள ஏ.ஐ. பெரிதும் உதவுகிறது.
அதே நேரத்தில், சுய சிந்தனை திறன் பாதிக்காதவாறு தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

