அனா... ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம்; மழலையருக்கான முன்பதிவு விறுவிறுப்பு
அனா... ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம்; மழலையருக்கான முன்பதிவு விறுவிறுப்பு
UPDATED : செப் 25, 2024 12:00 AM
ADDED : செப் 25, 2024 06:27 PM

சென்னை:
தினமலர் மாணவர் பதிப்பு சார்பில் நடத்தப்படும், அரிச்சுவடி ஆரம்பம் என்ற, குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள பெற்றோர், விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருகின்றனர்.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான, பட்டம் இதழும், வேலம்மாள் நியூஜென் கிட்ஸ்சும் இணைந்து வழங்கும், அனா... ஆவன்னா... அரிச்சுவடி ஆரம்பம் என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
வல்லுனர்கள்
குழந்தையின் கையால், நெல்மணியில் அகரம் எழுதி, வித்யாரம்பம் செய்வது விஜயதசமி நாளில்தான். அந்த நாளில், நம் நாளிதழ் சார்பில், அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், கல்வியாளர்கள், பல்துறை வல்லுனர்கள், கலைஞர்கள் பங்கேற்று, குழந்தைகளின் அகரத்தை துவக்கி வைக்க உள்ளனர்.
சென்னை, படப்பை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம், வடபழனி ஆண்டவர் கோவில், நாவலுார் வேலம்மாள் நியூஜென் பள்ளி, தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சூரப்பேட் வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி வளாகம் ஆகிய ஐந்து இடங்களில், அக்., 12ம் தேதி காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்க உள்ளது.
விபரம் பதியலாம்
நிகழ்ச்சியில், உங்கள் வீட்டில் உள்ள இரண்டரை வயது முதல் மூன்றரை வயது குழந்தைகளை அழைத்து வந்து, வித்யாரம்பம் துவக்கலாம். இதற்கான முன்பதிவு தற்போது துவங்கி, விறுவிறுப்பாக நடக்கிறது.
இதில், பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், தலா 1,000 ரூபாய் மதிப்புள்ள, லேர்னிங் கிட் மற்றும் குழந்தை அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 81229 71772, 81483 01771 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பிஞ்சுகளின் பஞ்சு விரல் பிடித்து
அகரம் கற்பிக்கும் பிரபலங்கள் முன்னாள் நீதிபதிகள் துரைசாமி, பி.என்.பிரகாஷ், விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் ஞானசம்பந்தன், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், திருப்பூர் கிருஷ்ணன், பிரபுசங்கர், விஞ்ஞானி டில்லிபாபு, மருத்துவர்கள் செங்கோட்டுவேல், நிர்மலா ஜெய்சங்கர், முருகுசுந்தரம் ஆகியோர் பிஞ்சுகளின் பஞ்சுவிரல் பிடித்து, அகரத்தை துவக்க உள்ளனர்.
அதேபோல், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர் சுதா சேஷய்யன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலச்சந்தர், ஐ.பி.எஸ்., அதிகாரி பவன்குமார், முன்னாள் டி.ஜி.பி., கே.வி.கே.ஸ்ரீராம், எல்.எம்.இ.எஸ்., நிறுவனர் பிரேம் ஆனந்த், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் ஆகியோரும் குழந்தைகளுக்கு குதுாகலமாக, அகரம் பயிற்றுவிக்க உள்ளனர்.
மேலும், டி.ஏ.வி., குழும பள்ளிகளின் கல்வி இயக்குனர் சாந்தி அசோகன், தொழிலதிபர்களான தங்கமலர், சுஜா கணேசன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாகன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுமதி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, குட்டிச் செல்வங்களுக்கு கல்விச் செல்வத்தை துவக்க உள்ளனர்.