பதவி உயர்வு வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
பதவி உயர்வு வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM
ADDED : ஜூலை 15, 2024 08:56 AM
திருப்பூர்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்ரா தலைமை வகித்தார். செயலாளர் கே.சித்ரா, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மாவட்ட தலைவர் மூர்த்தி, பொருளாளர் சம்பத், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க துணை தலைவர் சித்ரா தேவி உள்ளிட்டோர் பேசினர். அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.
'அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயமாக்கும் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய்; உதவியாளர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும்.
ஐந்து ஆண்டு பணிமுடித்த குறுமைய அங்கன்வாடி ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பதவி உயர்வு வழங்கவேண்டும் என்கிற அரசாணை பின்பற்றப்படுவதில்லை. குறுமையங்களிலிருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு, உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும், துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக புதிய மொபைல்போன் வழங்கவேண்டும். அங்கன்வாடிகளுக்கான உணவுப்பொருட்களை பணி நேரத்திலேயே வழங்கிவிட வேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- நமது நிருபர் -