UPDATED : செப் 05, 2025 12:00 AM
ADDED : செப் 05, 2025 11:01 PM

சென்னை:
என்.ஐ.ஆர்.எப்., எனும் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், அண்ணா பல்கலை பின்தங்கியுள்ளது. ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பிடித்துள்ளது.
நாடு முழுதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி திறன், பட்டதாரிகள் எண்ணிக்கை உட்பட, பல்வேறு செயல் திறன்களை அடிப்படையாக வைத்து, மத்திய கல்வித் துறை சார்பில், என்.ஐ.ஆர்.எப்., எனும் தேசிய தர வரிசை பட்டியல், 16 பிரிவுகளாக ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப் படுகிறது.
இதன்படி, 2025ம் ஆண்டுக்கான என்.ஐ.ஆர்.எப்., தர வரிசை பட்டியலை, மத்திய கல்வித் துறை நேற்று வெளியிட்டது. நடப்பாண்டு, 'நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள்' எனும் புதிய பிரிவு இணைக்கப்பட்டு, 17 பிரிவுகளாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், ஒட்டுமொத்த பிரிவில், சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பிடித்தது. அண்ணா பல்கலை ஒட்டுமொத்த தரவரிசையிலும், பல்கலை, இன்ஜினியரிங் தரவரிசையிலும் பின்தங்கியது.
இந்த பட்டியலில், மத்திய அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் முதன்மை இடங்களை பிடித்துள்ளன. மாநில அரசின் பல்கலை, கல்லுாரிகள் பின்தங்கியுள்ளன.
சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனம், ஒட்டுமொத்த தர வரிசையில் தொடர்ந்து ஏழாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது; இன்ஜினியரிங் பிரிவில் தொடர்ந்து 10வது முறையாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது.