UPDATED : ஜன 13, 2026 08:38 PM
ADDED : ஜன 13, 2026 08:40 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பசுமை குழு உறுப்பினராக, தனிநபர், சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்றோர் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், சுற்றுச்சூழல் காலநிலை துறை மற்றும் வனத்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து, 2021ல், மாவட்ட பசுமை குழு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்குப் பின், குழுவை மேலும் இணக்கமான, பயனுள்ள வகையில் மறுசீரமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பதிவு செய்யப்பட்ட அரசு அல்லாத அமைப்புகள், சமூக அமைப்புகள், இளைஞர்கள், சுற்றுச்சூழல் குழுக்கள், சுற்றுச்சூழல் நிபுநர்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பசுமைக் குழுவின் முக்கிய பணியாக, பொது நிலங்களில் உள்ள மரங்களை கணக்கெடுத்து பராமரித்தல், மரம் வெட்ட அனுமதி வழங்கும் முன்சரி பார்த்தல், தாயகம் சார்ந்த இனங்களை ஆண்டுதோறும் நடுதல், சமூக பங்களிப்பை ஊக்குவித்தல் ஆகியவை உள்ளது.
சுயவிவரம், பணிச்சுருக்கம் போன்ற விபரங்களை, ஜன., 21க்குள், கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். collrkpm@nic.in அல்லது dfokpm@gmail.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

