உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாணவ மாணவியருக்கு அழைப்பு
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாணவ மாணவியருக்கு அழைப்பு
UPDATED : ஜூலை 10, 2026 04:46 PM
ADDED : ஜூலை 10, 2026 04:50 PM
திருத்தணி:
உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அரசு பள்ளி, கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில் படிக்கும் மாணவ மாணவியர், அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, திருத்தணி தனி தாசில்தார் அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தணி தாசில்தார் அலுவலகத்தின் தரைத்தளத்தில், சமூக பாதுகாப்பு திட்டம் - தனி தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு, முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி மற்றும் மாணவ மாணவியருக்கு உதவித் தொகை போன்றவை வழங்கப்படுகின்றன.
இது குறித்து, திருத்தணி தனி தாசில்தார் தேவி கூறியதாவது:
உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உழவர் அட்டை பெற்றுள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு, நிதியுதவி மற்றும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தொழிற்கல்வி கற்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு தலா 1,250 ரூபாயும், மாணவியருக்கு 1,750 ரூபாயும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு 1,450 ரூபாயும், மாணவியருக்கு 1,950 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2,000 ரூபாய், மாணவியருக்கு 2,500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது.
மேலும், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 2,250 ரூபாயும், மாணவியருக்கு 2,750 ரூபாயும், விடுதியில் தங்கி படிக்கு மாணவர்களுக்கு 3,250 ரூபாயும், மாணவியருக்கு 3,750 ரூபாயும் வழங்கப்படுகிறது.
அதே போல், மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு 4,250 ரூபாயும், மாணவியருக்கு, 4,750 ரூபாயும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு 6,250 ரூபாயும், மாணவியருக்கு 6,750 ரூபாயும் என, உதவித்தொகை வழங்கப்படுகிறது.
எனவே, மாணவர்கள் உதவி தொகை பெறுவதற்கு கல்வி சான்று, ஆதார் கார்டு, அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
