திறன் பயிற்சிக்கு இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு
திறன் பயிற்சிக்கு இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு
UPDATED : பிப் 06, 2026 12:51 PM
ADDED : பிப் 06, 2026 01:27 PM
காஞ்சிபுரம்: 'தாட்கோ' வாயிலாக பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதால், இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தாட்கோ எனப்படும் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப் படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உலகதர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, உயர் தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு பயிற்சி, ஆடை வடிவமைப்பு, மேலாண்மை திறன் பயிற்சி, மற்றும் அழகுக்கலை ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இப்பயிற்சியில் சேர, 18 - 25 வயது வரை உள்ளவர்களாகவும் கல்வி தகுதியாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். ஆடை வடிவமைப்பு, மேலாண்மை திறன் பயிற்சி போன்றவைக்கு, 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
இப்பயிற்சி முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புக்கு வழி வகை செய்யப்படும்.
இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்களாகும். சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

