தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் தன்னார்வலர்கள் உதவ பெற்றோர் கோரிக்கை
தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் தன்னார்வலர்கள் உதவ பெற்றோர் கோரிக்கை
UPDATED : பிப் 06, 2026 01:25 PM
ADDED : பிப் 06, 2026 01:27 PM
மாடம்பாக்கம்:
மாடம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், தரையில் அமர்ந்து படிக்கும் மாணவ, மாணவியருக்கு இருக்கை வசதி செய்து உதவும்படி, தன்னார்வலர்களுக்கு, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி அடுத்துள்ள மாடம்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், 185 மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் வழி, ஆங்கில வழிகளில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
இப்பள்ளியில், 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 130 மாணவ, மாணவியர், இருக்கை வசதி இல்லாததால், தரையில் அமர்ந்து சிரமப்பட்டு படித்து வருகின்றனர். இருக்கை வசதி இருந்தால், கற்றல் திறன் மேம்படும் என்பதால், தன்னார்வலர்கள் உதவியை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:
கடந்த 95 ஆண்டுகளுக்கு முன், குன்றத்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இந்த தெருவிற்கு, 'பள்ளி தெரு' என்றே பெயர் சூட்டப்பட்டது.
இங்கு படித்த பல மாணவர்கள் தொழில் முனைவோர், அரசு அதிகாரி, மருத்துவர் என, பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் என, இரு மொழியிலும் இங்கு கல்வி பயிற்றுவிக்கப்படுவதால் ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளை இங்கு சேர்க்க விரும்புகின்றனர். ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாததால், வேறு பள்ளிக்கு சென்று விடுகின்றனர்.
குறிப்பாக, 130 மாணவ, மாணவியர் தரையில் அமர்ந்தே படித்து வருகின்றனர். பாடம் நடத்தும் ஆசிரியரையும், கரும்பலகையையும் அண்ணாந்து பார்ப்பதால் சிரமம் ஏற்பட்டு, அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது.
எனவே, உதவும் குணம் படைத்த தன்னார்வலர்கள், இந்த பள்ளிக்கு உதவி செய்தால், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். தவிர, எதிர் வரும் கல்வியாண்டில், புதிதாக சேரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். உதவ விருப்பம் உள்ளவர்கள், பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

