சட்ட கல்லுாரி மாணவர்கள் லேப்டாப் கோரி ஆர்ப்பாட்டம்
சட்ட கல்லுாரி மாணவர்கள் லேப்டாப் கோரி ஆர்ப்பாட்டம்
UPDATED : பிப் 06, 2026 01:25 PM
ADDED : பிப் 06, 2026 01:25 PM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லுாரி மாணவ, மாணவியர், இலவச மடிக்கணினி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் 'உலகம் உன் கையில்' என்ற திட்டத்தின் கீழ், அரசு கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஐந்து ஆண்டு சட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆனால், அதே கல்லுாரியில் மூன்று ஆண்டு சட்டப்படிப்பு பயிலும் தங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும்.
ஒரே கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இடையே பாகுபாடு காட்டக் கூடாது. இதனால், தங்களின் டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை பாதிப்பதாகக் கூறி, நேற்று காலை கல்லுாரி நுழைவு பகுதியில் மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அதன் பின், அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்திய பின் கலைந்து சென்றனர்.

