குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் பணி ஆணை? தேர்வர்கள் அதிருப்தி
குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் பணி ஆணை? தேர்வர்கள் அதிருப்தி
UPDATED : மார் 14, 2026 09:29 PM
ADDED : மார் 14, 2026 09:32 PM

மதுரை:
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியான உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஒரே நேரத்தில் 48 பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடந்தது. இதில் 5 பாடப்பிரிவுகளுக்கு முடிவு வெளியிடப்பட்டு 11 பேருக்கு மட்டும் நேற்று பணி நியமன உத்தரவு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு கலை அறிவியல், கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 2708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு கடந்த டிச., 27ல் எழுத்துத் தேர்வு நடந்தது. தகுதியுள்ள 48 பாடப் பிரிவுகளை சேர்ந்த 42,064 பேர் 195 மையங்களில் எழுதினர். இதற்கான ரிசல்ட்டை எதிர்பார்த்த நிலையில், 5 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் முடிவு அறிவிக்கப்பட்டு, நேர்காணல் நடத்தி 11 பேருக்கு பணி நியமன உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பொதுவாக காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஒரே நேரத்தில் முடிவு வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப்படும். அதன் பின் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்படுவது இது வரை இருந்த நடைமுறை. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியும் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மட்டும் தேர்வு செய்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது என தேர்வு எழுதியவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் தங்கராஜ் கூறியதாவது:
புதிய நடைமுறை அதிர்ச்சியளிக்கிறது. வரலாற்று கல்வி, மனித உரிமை, இந்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா, மரைன் பயாலஜி, வைல்டு லைப் பயாலஜி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 11 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இப்பாடப்பிரிவுகளுக்கு மார்ச் 22, 23ல் நேர்முக தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தேர்வும் முன்கூட்டி நடத்தப்பட்டுள்ளது. கணிதம், வேதியியல், இயற்பியல், தமிழ், ஆங்கிலம் உட்பட 43 பாடப் பிரிவில் தேர்வு எழுதியவர்களுக்கு இன்னும் 'ரிசல்ட்' வெளியிடவில்லை. இதற்கு பின் பணியில் சேர்ந்தால் பணிமூப்பு பிரச்னை ஏற்படும்.
ஏற்கனவே 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில் 2708 இடங்கள் மட்டும் நிரப்ப கோரி சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அரசு கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 1146 பணியிடங்கள் ஒதுக்க வேண்டும் என்பதையும் அரசு பின்பற்றவில்லை. தேர்வு எழுதிய 42,064 பேருக்கும் ஒரே நேரத்தில் முடிவு வெளியிட்டு, நேர்முக தேர்வு நடத்தி ஒரே நாளில் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும் என்றார்.

