UPDATED : மே 21, 2025 12:00 AM
ADDED : மே 21, 2025 08:51 AM
சென்னை:
குழந்தைகளின் கவனச் சிதறலை போக்கவும், மூளையின் செயல் திறனை அதிகரிக்கவும், விரல் நயம் என்ற அமைப்பு, வேளச்சேரியில் நேற்று இலவச செயல்திறன் பயிற்சியை வழங்கியது.
இது குறித்து, அந்த அமைப்பின் நிர்வாகி ரத்னா கூறியதாவது:
படிப்பு நேரம் போக, ஓய்வு நேரங்களை குழந்தைகளுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என, எனக்கு தெரிந்த பெற்றோர் கூறினர்.
இதனால், இந்த அமைப்பை துவங்கினேன். அதன் வாயிலாக கயிறு, துணி, கல், மண், இலை போன்ற வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை, எப்படி கலைநயமாக மாற்றுவது என, குழந்தைகளுக்கு கற்று கொடுத்தோம்.
கீரை ஆய்வது, துணி மடிப்பது, வீட்டில் தினமும் என்னென்ன வேலைகள் இருக்கும் போன்றவற்றை சொல்லி கொடுக்கிறோம். நேரத்தை பயனுள்ளதாக எப்படி மாற்றுவது; பிறரிடம் எப்படி பழக வேண்டும்; குட் டச் - பேட் டச் போன்றவற்றை, பயிற்சி வாயிலாக கற்றுக்கொடுக்கிறோம்.
வேளச்சேரி தபால் நிலையம் அழைத்து சென்று, அங்குள்ள அன்றாட பணிகள், தபால் கார்டின் பயன், கடிதம் எழுதுவது, சிறுசேமிப்பு திட்டங்கள் குறித்து, அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாட வைத்தோம்.
குழந்தைகளின் செயல் திறனை ஆக்கப்பூர்வமாக அமைக்க, இதுபோன்ற நிகழ்ச்சிகள் பயன் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.