உதவி பேராசிரியர் தேர்வு 5 பாடத்திற்கு முடிவு வெளியீடு
உதவி பேராசிரியர் தேர்வு 5 பாடத்திற்கு முடிவு வெளியீடு
UPDATED : பிப் 26, 2026 04:47 PM
ADDED : பிப் 26, 2026 04:49 PM

சென்னை:
உதவி போராசிரியர்கள் போட்டி தேர்வில், ஐந்து பாடங்களுக்கான முடிவுகளை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.
தமிழக உயர்கல்வித்துறை கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கீழ், 175 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில், 8,000க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. இந்த சூழலில், 'அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 4,000 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்' என உயர்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
நீதிமன்ற வழக்குகள் காரணமாக, 48 பாடங்களுக்கான, 2,708 காலிப்பணியிடங்களை, போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்புவதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த ஆண்டு, அக்., 16ல் அறிவித்தது.
இதற்கான போட்டித் தேர்வு, கடந்த டிச., 27ல் நடந்தது. தேர்வை, மாநிலம் முழுதும் 42,064 பேர் எழுதினர். தேர்வுக்கான விடைக்குறிப்பு, கடந்த மாதம் 5ம் தேதி வெளியானது.
இந்நிலையில், உதவி பேராசிரியர் போட்டி தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. முதல் கட்டமாக, வரலாற்று கல்வி, மனித உரிமைகள், இந்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா, கடல்சார் உயிரியல், வனவிலங்கு உயிரியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் https://www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச் 23, நேர்காணல் மார்ச் 24ல் நடக்க உள்ளது.

