UPDATED : ஏப் 16, 2025 12:00 AM
ADDED : ஏப் 16, 2025 11:41 AM

திருப்பூர்:
மத்திய அரசின், நிதி ஆயோக் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவுத் திறனை ஊக்குவிக்கும், அடல் டிங்கரிங் லேப்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய அளவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் செயல்பட்டு வரும் இந்த திட்டம், தமிழகத்தில் மட்டும் 1,800க்கும் மேற்பட்ட பள்ளிகளில் துவக்க இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 118 பள்ளிகள்; திருப்பூர் மாவட்டத்தில், 79 பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப்'கள் உள்ளன. ஆய்வகங்களில், 3D பிரின்டிங், ரோேபாடிக்ஸ், டிரோன் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் கண்டுபிடிப்புகள் போன்ற தொழில்நுட்பங்களில், மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. அடல் டிங்கரிங் லேப்ஸ்கள், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவ, மாணவியரின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அடல் டிங்கரிங் லேப்ஸ் ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், இந்திய மாணவர்களின் ஆராய்ச்சி திறனை, பள்ளி காலத்தில் இருந்தே மேம்படுத்தும் இந்த திட்டம், மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டமாகும். தமிழகத்திலும் இதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.
மேலும், பல பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப்'கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வரும் கல்வியாண்டில் இருந்து, கூடுதல் கவனம் செலுத்தப்படும், என்றார்.