பள்ளியில் துாங்கிய ஆசிரியர் அதிகாரிகள் விசாரிக்க உத்தரவு
பள்ளியில் துாங்கிய ஆசிரியர் அதிகாரிகள் விசாரிக்க உத்தரவு
UPDATED : ஜூன் 24, 2025 12:00 AM
ADDED : ஜூன் 24, 2025 09:06 AM
ஆத்துார்:
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே வளையமாதேவி கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக இருப்பவர் குமார், 54. இவர் மீது, தொந்தரவு செய்வதாக, கடந்தாண்டு பள்ளி மாணவியர் சிலர் புகாரளித்தனர்.
ஆத்துார் மகளிர் போலீசார் விசாரணையை தொடர்ந்து, பைத்துார் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து, சேலம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். மாணவியர் புகாரை திரும்ப பெற்றதால், நடவடிக்கை கைவிடப்பட்டது.
நடப்பாண்டில் மீண்டும் வளையமாதேவி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார். கடந்த, 17ல் வகுப்பறைக்குள் மேஜையில் படுத்து குமார் துாங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. விசாரணை நடத்த, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி கூறுகையில், மாற்றுத்திறனாளி ஆசிரியரான குமார், காலையில் அரை மணி நேரம் தாமதமாக வருவார். மாலை அரை மணி நேரம் முன்பே சென்று விடுவார். இடைநிலை ஆசிரியராக இருந்தாலும், சமூக அறிவியல், தமிழ் பாடம் மட்டுமே நடத்துவார். முன்னாள் மாணவர்கள் புகாரில், ஏற்கனவே மூன்று முறை பள்ளிக்கல்வி அலுவலர்கள் விசாரித்தனர். தற்போது அவர் துாங்கும் வீடியோ குறித்து, மாவட்ட கல்வி அலுவலர் விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர், என்றார்.