பொதுத்தேர்வு பணி ஒதுக்கீட்டில் கடைசி நேர டென்ஷன் வேண்டாம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
பொதுத்தேர்வு பணி ஒதுக்கீட்டில் கடைசி நேர டென்ஷன் வேண்டாம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
UPDATED : பிப் 09, 2026 01:40 PM
ADDED : பிப் 09, 2026 01:42 PM

மதுரை:
மதுரையில் பொதுத்தேர்வுக்கான பணி ஒதுக்கீட்டை தேர்வு துவங்கும் பத்து நாட்களுக்குள் முன்பே முடிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிளஸ் 2வுக்கு மார்ச் 1, பத்தாம் வகுப்புக்கு மார்ச் 11ல் பொதுத்தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2க்கு 55, பத்தாம் வகுப்புக்கு 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களுக்கு முதன்மை, அறைக் கண்காணிப்பாளர்கள், துறை, வழித்தட அலுவலர்கள் என 2000க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர், ஆசிரியர், அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இப்பணியை கடந்தாண்டு போல் இழுத்தடிக்காமல் முன்கூட்டியே முடித்து ஆசிரியர்களுக்கு ஏற்படும் கடைசி நேர 'டென்ஷனுக்கு' சி.இ.ஓ., தயாளன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
இந்தாண்டு பிளஸ் 2வில் 36 ஆயிரம், பத்தாம் வகுப்பில் 38 ஆயிரம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவுள்ளனர். இன்று (பிப்.,9) பிளஸ் 2வுக்கும், பிப்.23 பத்தாம் வகுப்புக்கும் செய்முறை தேர்வு துவங்குகிறது.
கடந்தாண்டு தேர்வு துவங்கும் முதல் நாள் வரை தேர்வுப் பணி ஒதுக்கீடு நடந்து குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தாண்டு அதுபோன்ற சூழலை தவிர்க்க வேண்டும். தேர்வு துவங்கும் 10 நாட்களுக்கு முன்பே பணி ஒதுக்கீட்டை முடிக்க வேண்டும்.
குறிப்பாக ஆசிரியர்களுக்கு அவர்கள் இருப்பிடத்தில் இருந்து 8 முதல் 10 கி.மீ.,க்குள் பணி ஒதுக்கினால் பிரச்னை எழாது. 40 கி.மீ.,க்கு மேல் தேர்வுப் பணி ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே நியமித்த ஆசிரியர்களை மீண்டும் நியமிக்காத வகையில் பணி ஒதுக்கீடை கண்காணிக்க வேண்டும் என்றனர்.

