அரசு பள்ளிகளில் புத்தக பூங்கொத்து திட்டம்; புதிய கல்வியாண்டில் செயல்படுத்த வலியுறுத்தல்
அரசு பள்ளிகளில் புத்தக பூங்கொத்து திட்டம்; புதிய கல்வியாண்டில் செயல்படுத்த வலியுறுத்தல்
UPDATED : மே 13, 2025 12:00 AM
ADDED : மே 13, 2025 10:17 AM

உடுமலை:
மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்த, அரசுப்பள்ளிகளில் புத்தக பூங்கொத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 228 மற்றும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 34 உள்ளன. பள்ளிக் குழந்தைகளின் புத்தக அறிவை அதிகரிக்க, புத்தக பூங்கொத்து திட்டம் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில், அரசுப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும், அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப, கதை மற்றும் நாடக புத்தகங்கள் வழங்கப்படும். புதிர் வினாக்கள், விடுகதைகள் போன்ற மாணவர்களின் சிந்தனையை துாண்டும் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
அரசின் சார்பில் வழங்கப்படும் இந்த புத்தகங்களை, வகுப்பறைகளில், மாணவர்களின் கண்பார்வையில் இருக்கும் படி கொத்துக்களாக தொங்கவிட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும், அவர்களது பிறந்தநாளன்று, இனிப்புகள் வழங்குவதற்கு மாற்றாக, புதுமையான புத்தகத்தை அந்த வகுப்புக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு, வகுப்புகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வைக்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆசிரியர்கள், வகுப்பறைக்கு வராத நேரத்தில், பாடஇடைவேளை, நன்னெறி வகுப்புகளின்போது, மாணவர்கள் அவர்களாகவே, புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
திட்டம் குழந்தைகளுக்கு பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. புத்தகங்களை படித்து, புதிர்போட்டு விளையாடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குழந்தைகளின் வாசிப்புத்திறனும் மேம்பட்டது. இத்தகைய திட்டம், தற்போது அரசு பள்ளிகளில் காணாமல் போய்விட்டது.
மேல்நிலைப்பள்ளிகளில், நுாலகங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அதற்கான பொறுப்பாளர் இல்லாமல், புத்தகங்கள் புத்தம் புதிதாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வரும் புதிய கல்வியாண்டில் இத்திட்டத்துக்கு புத்துயிர் அளித்து, குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமென, கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
புத்தக பூங்கொத்து திட்டத்தால், குழந்தைகளும் ஆர்வத்தோடு, அவர்களாகவே அவர்களுக்கு பிடித்த புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்தனர். இதனால், வாசிப்புத்திறன் மட்டுமின்றி, அடிப்படை கணக்குகளையும் அறிந்துகொண்டனர்.
அப்போது, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அடிக்கடி அறிக்கை கேட்கப்படும். மாணவர்களின் புத்தக வாசிப்பு குறித்து, கல்வித்துறையின் வாயிலாக ஆய்வு நடத்தப்படும். அதனால், திட்டத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இப்போது இந்த திட்டம் பின்பற்றப்படுதில்லை.
இவ்வாறு, தெரிவித்தனர்.