UPDATED : ஜன 26, 2026 12:04 PM
ADDED : ஜன 26, 2026 12:06 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா துவக்க விழா ராமநாதபுரம் - மதுரை ரோடு ராஜா பள்ளி மைதானத்தில் நேற்று காலை நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார், அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்.
கலெக்டர் பேசுகையில், ராமநாதபுரத்தில் 8 வது முறையாக புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. புத்தகங்கள் பார்ப்பது மட்டுமின்றி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் தினமும் பேசவுள்ளனர். மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பாரம்பரிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
புத்தக திருவிழா சிறப்பு வாசகமாக 'புத்தகம் படித்திடு, புத்துலகம் படைத்திடு,' என்ற வாசகத்தை எழுதிய முதுகுளத்துாரை சேர்ந்த இசக்கிதேவிக்கு ரூ.1000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், வன உயிரின காப்பாளர் அகில்தம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன், கலை இலக்கிய ஆர்வலர் சங்கத் தலைவர் சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புத்தகத் திருவிழாவில் 80 உள் அரங்குகள், அரசின் பல்வேறு துறை சார்ந்த கண்காட்சிகள், கைவினைப் பொருட்கள் கடைகள், பயிற்சி பட்டறை, கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்கலாம். பிப்., 4 வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இலவசமாக கண்காட்சியை பார்வையிடலாம். மாலை இசை நிகழ்ச்சிகளும், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்களின் சொற்பொழிவுகளும் நடக்கிறது.

