நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் காலை சிற்றுண்டி: பெற்றோர், ஆசிரியர்கள் வலியுறுத்தல்
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் காலை சிற்றுண்டி: பெற்றோர், ஆசிரியர்கள் வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 27, 2024 12:00 AM
ADDED : ஜூன் 27, 2024 10:21 AM

சிவகங்கை:
கிராமப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளை போன்றே நகர்புற அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதியில் உள்ள 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை கூடுதலாக 433 மாநகராட்சி, நகராட்சி அரசு நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் 56,160 மாணவர்களுக்கு விரிவுபடுத்தியுள்ளனர்.இத்திட்டம் தற்போது 31,008 அரசு தொடக்க பள்ளிகளில் விரிவுபடுத்தியுள்ளனர்.
உதவி பெறும் பள்ளியில் சிற்றுண்டி
இக்கல்வி ஆண்டு முதல் கிராமப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் 2.50 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.பள்ளிகள் திறந்து 10 நாட்களுக்கு மேலாகியும், ஊரக பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் இன்னும் துவக்கப்படவில்லை.
அதே நேரம் நகர்புற பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படவில்லை.நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.அவர்களின் நலன் கருதி இக்கல்வி ஆண்டு முதல் கிராமப்புறங்களை போன்றே நகர்புறங்களில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.