UPDATED : டிச 02, 2024 12:00 AM
ADDED : டிச 02, 2024 08:37 AM
சென்னை:
சென்னையில் நடக்க உள்ள, மாநில அளவிலான தபால் தலை கண்காட்சியில், தங்கள் சேகரிப்புகளை காட்சிப்படுத்த விரும்புவோர், டிசம்பர், 9க்குள் விண்ணப்பிக்கலாம் என, தபால் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தபால் வட்டம் சார்பில், சென்னை ெஷனாய் நகர் அம்மா அரங்கத்தில், ஜன., 29 முதல் பிப்ரவரி, 1 வரை, மாநில அளவிலான தபால் தலை கண்காட்சியான, தநாபெக்ஸ் - 2025 நடக்க உள்ளது. தபால் தலை சேகரிப்பை ஊக்குவிக்க, இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. பிரபல தபால் தலை சேகரிப்பாளர்கள், பள்ளி மாணவ - மாணவியரின் தபால் தலை சேகரிப்புகள், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வசிப்போர், இக்கண்காட்சியில் பங்கேற்கலாம். தங்கள் தபால் தலை சேகரிப்புகளை, காட்சிப்படுத்த விரும்புவோர், டிசம்பர், 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம், தமிழகத்தில் உள்ள, அனைத்து தபால் தலை சேகரிப்பு அலுவலகங்களிலும் கிடைக்கும்.
மேலும், https://tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தபால் துறை அறிவித்துள்ளது.