தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஊதிய வேறுபாடுகளை நீக்க வேண்டும்
தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஊதிய வேறுபாடுகளை நீக்க வேண்டும்
UPDATED : ஏப் 12, 2026 11:14 AM
ADDED : ஏப் 12, 2026 11:19 AM
கரூர்:
தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், ஊதியம் வழங்குவதில் உள்ள வேறுபாடுகளை நீக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி தேர்வுகள் துறை இயக்குனர் சசிகலாவுக்கு, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் மனு அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு, ஒரு நாளைக்கு 24 விடைத்தாள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒரு நாளைக்கு, 30 விடைத்தாள் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வுகளில் அறிவியல் பாடங்களுக்கு, 70 மதிப்பெண்களுக்கும், தமிழ் மொழிப் பாடம் உட்பட அனைத்து பாடங்களுக்கும், 90 மதிப்பெண்களுக்கு மட்டுமே விடைத்தாள் திருத்தப்பட்டு வருகிறது. மீதி, 10 மதிப்பெண்கள் அந்தந்த பாடங்களின் அகத்தேர்வு மற்றும் புறத்தேர்வு மதிப்பெண்களாக ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், 10ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம் போன்ற படங்கள், 100 மதிப்பெண்களுக்கு திருத்தப்பட்டு வருகிறது. அறிவியல் பாடம் மட்டும், 75 மதிப்பெண்களுக்கு திருத்தப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 தேர்வு தேர்வு பணிகளில் ஈடுபடும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விட, அதிக மதிப்பெண்கள் மற்றும் அதிக விடைத்தாள்களை திருத்தி வரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு விடைத்தாளுக்கு ஊதியமாக, 8 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் பணியில் ஈடுபடும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியமாக விடைத்தாள் ஒன்றுக்கு, 10 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரே விதமான மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்குவதில் வேறுபாடு காட்டி வருவது பட்டதாரி ஆசிரியர்களை அவமரியாதை செய்வது போன்றது. எனவே, விடைத்தாள்களின் எண்ணிக்கையை குறைத்தும், மதிப்பு ஊதியத்தை உயர்த்தியும் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

