ஐந்து பாலிடெக்னிக் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்த முடிவு
ஐந்து பாலிடெக்னிக் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்த முடிவு
UPDATED : ஏப் 11, 2026 11:22 PM
ADDED : ஏப் 11, 2026 11:25 PM

சென்னை:
தொடர்ந்து சரியும் மாணவர் சேர்க்கை எதிரொலியாக, நடப்பு கல்வியாண்டில், ஐந்து தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்த முடிவு செய்துள்ளன.
தமிழக உயர்கல்வித் துறையின், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ், 56 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள், 32 அரசு உதவி பெறும் கல்லுாரிகள், 350க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
குறைவு
இதில், அரசு கல்லுாரிகளில், 18,000 டிப்ளமா படிப்புக்கான இடங்கள் உட்பட மொத்தம், 1.20 லட்சம் இடங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, டிப்ளமா படிப்பின் மீதான ஆர்வம், மாணவ, மாணவியர் மத்தியில் குறைந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை சரிவை சந்தித்து வருகிறது. சராசரியாக, 90,000க்கும் அதிகமான இடங்கள் நிரம்பாமல், காலியாகவே இருக்கின்றன.
இதன் காரணமாக, கடந்த 2024 - 25ம் கல்வியாண்டில், 17 பாலிடெக்னிக் கல்லுாரிகள், மாணவர் சேர்க்கை குறைவால், முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தாமல் விலகின. அடுத்ததாக, 2025 - 26ம் கல்வியாண்டில், 15 கல்லுாரிகள் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தவில்லை.
நிர்வாகம் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நிறுத்திக்கொள்ள, ஐந்து தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
டிப்ளமா முடித்தவர்களுக்கு, போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்காததால், மாணவர்கள் மத்தியில் அந்த படிப்புகளின் மீது ஆர்வம் குறைந்து வருகிறது.
வரும் கல்வியாண்டில், மேலும் ஐந்து தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள், முதலாம் ஆண்டு சேர்க்கையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளன. இதற்கான, தடையில்லா சான்று கோரி, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தை கல்லுாரி நிர்வாகங்கள் அணுகி உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
