நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கிய உரிமையாளர் மீது வழக்கு
நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கிய உரிமையாளர் மீது வழக்கு
UPDATED : அக் 19, 2024 12:00 AM
ADDED : அக் 19, 2024 03:44 PM

ருநெல்வேலி:
திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வாடகை கட்டடத்தில், கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அஹமத், 52, என்பவர், ஜல் நீட் அகாடமி என்ற பெயரில், நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். ஜலாலுதீனும் வகுப்பு எடுப்பார். ஆக., 25ல் அவர் வகுப்பு எடுத்த போது, சில மாணவர்கள் துாங்கியுள்ளனர்.
அந்த மாணவர்களை அவர் வரிசையில் நிற்க வைத்து பிரம்பால் அடித்துள்ளார். மையத்தின் முன்பு காலணிகளை முறையாக போடாததால் அவற்றை கையில் எடுத்து வந்து வகுப்பில் வீசியுள்ளார்.
இவ்வாறு மாணவர்களை தினமும் அடித்து, உதைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர். மேலப்பாளையம் போலீசார் விசாரிக்க முன்வரவில்லை.
எனவே, அங்கு வார்டனாக பணிபுரிந்த திருநெல்வேலி தாழையூத்தை சேர்ந்த அமீர் உசேன், 23, என்பவர் மாணவர்கள் தாக்கப்படும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, மேலப்பாளையம் ஸ்டேஷனில் கொடுத்து, புகார் செய்தார்.
அப்போதும், புகாருக்கான ரசீது மட்டும் வழங்கிய மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜி, புகார் குறித்து ஜலாலுதீனிடம் கூறியுள்ளார். அமீர் உசேனை ஜலாலுதீன் வேலையில் இருந்து நீக்கினார்.
இதையடுத்து, புகார் செய்த அமீர் உசேன் ஊடகங்களுக்கு, கேமரா பதிவு காட்சிகளை வழங்கினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியானதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், வழக்கமான பணிகளுக்காக வந்த போது,திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். அவரிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டது. அவர், உடனே ஜல் நீட் அகாடமி வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
அவர் கூறியும், போலீஸ் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து பேசினார். காயம் பட்டதை உறுதி செய்தார். இதையடுத்து, மூன்று பிரிவுகளில் ஜலாலுதீன் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருக்கிறதா?
நீட் பயிற்சி மையம் நடத்த முறையான அனுமதி பெறப்பட்டதா, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; அந்த விடுதிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யவும், உணவின் தரத்தை சோதிக்கவும் கண்ணதாசன் அறிவுறுத்தினார்.
அவர் கூறுகையில், முன்னரே புகார் வந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்துள்ளேன். இந்த சம்பவத்தில் புகார் கொடுத்தவர்கள் வாபஸ் பெற்றாலும், மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை நடத்தும், என்றார்.