முதன்மைக்கல்வி அதிகாரியின் சம்பளம் நிறுத்தம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
முதன்மைக்கல்வி அதிகாரியின் சம்பளம் நிறுத்தம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : அக் 19, 2024 12:00 AM
ADDED : அக் 19, 2024 03:47 PM

மதுரை:
ஆசிரியருக்கு சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதை நிறைவேற்றாத ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் சம்பளத்தை விடுவிக்கக்கூடாது என அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவரங்கத்திலுள்ள ஒரு பள்ளியில் ஆரோக்கிய அருள் தாமஸ் பட்டதாரி உதவி ஆசிரியராக பணிபுரிகிறார். அவர் 2022 ஏப்.4ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த உத்தரவு 2022ல் நவ.1ல் ரத்து செய்யப்பட்டது. அன்று பணியில் சேர்ந்தார்.
சம்பளம் வழங்க உத்தவிடக்கோரி ஆரோக்கிய அருள் தாமஸ் உயர்நீதிமன்றக்கிளையில் மனு செய்தார்.
2023 டிச.20ல் நீதிபதி ஆர்.விஜயகுமார்:
பள்ளி நிர்வாகம் அனுப்பும் சம்பள பில் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி 2 வாரங்களில் சம்பளம் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை நிறைவேற்றாததால் முதன்மைக் கல்வி அதிகாரி ரேணுகா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஆரோக்கிய அருள் தாமஸ் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி ஆர்.விஜயகுமார்:
சம்பள பில்களை முதன்மைக் கல்வி அதிகாரி பெற்றுக் கொண்டாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரால் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அவர் இந்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறுவது தெளிவாகிறது. மனுதாரரின் சம்பள பில்களுக்கு தீர்வு காணும்வரை முதன்மைக் கல்வி அதிகாரியின் சம்பளத்தை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் விடுவிக்கக் கூடாது.
இவ்வாறு உத்தரவிட்டார்.
ராமநாதபுரத்தில் பணிபுரிந்த ரேணுகா தற்போது மதுரை முதன்மை கல்வி அதிகாரியாக உள்ளார்.