சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது
UPDATED : பிப் 18, 2026 03:12 PM
ADDED : பிப் 18, 2026 03:13 PM

புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் 37 மையங்களில் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. அதில், 122 பள்ளிகளை சேர்ந்த 5,638 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
புதுச்சேரியில், 2025 - 26ம் கல்வி ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று 37 மையங்களில் அடிப்படை கணிதம், நிலையான கணிதம் என இரண்டு பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடந்தது.
புதுச்சேரியில் உள்ள 83 பள்ளிகளை சேர்ந்த 3,916, காரைக்காலில் 25 பள்ளிகளை சேர்ந்த 1,134, மாகேவில் 6 பள்ளிகளை சேர்ந்த 333, ஏனாமில் 8 பள்ளிகளை சேர்ந்த 255 என 122 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,638 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதே போல், காலாப்பட்டு நவோதயா வித்யாலயா, கோரிமேடு ஜிப்மர் வளாகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா மற்றும் தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் தேர்வு நேற்று துவங்கியது. தேர்வு வரும் மார்ச் 10ம் தேதி வரை நடக்கிறது.
முன்னதாக, மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு, தேர்வு எழுத பள்ளிக்கு சென்றனர். தேர்வு மையங்களுக்குள் மொபைல் மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துவர தடை செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சோதனைக்கு பிறகே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல் நாடு முழுதும் 10 மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் நேற்று உயிரி தொழில்நுட்பம், தொழில்முனைவோர், சுருக்கெழுத்து (ஆங்கிலம்), (இந்தி) பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடந்தது.
இந்த பாடப்பிரிவுகளை புதுச்சேரி மாணவர்கள் யாரும் பயிலவில்லை. இதனால் இன்று (18ம் தேதி) நடக்கும் உடற்கல்வி பாடப்பிரிவில் இருந்து புதுச்சேரி மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.
அதில், புதுச்சேரியில் உள்ள 44 பள்ளிகளை சேர்ந்த 3,953, காரைக்காலில் 11 பள்ளிகளை சேர்ந்த 1,223, மாகேவில் 4 பள்ளிகளை சேர்ந்த 346, ஏனாமில் ஒரு பள்ளியை சார்ந்த 44 என, மொத்தமாக 60 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,566 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

