சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு: அடுத்த வாரம் வெளியாகிறது முடிவு
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு: அடுத்த வாரம் வெளியாகிறது முடிவு
UPDATED : ஏப் 13, 2026 11:43 AM
ADDED : ஏப் 13, 2026 11:45 AM

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள், அடுத்த வாரம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுதும், 10ம் வகுப்பில் 25 லட்சம்; பிளஸ் 2வில் 18.5 லட்சம் என மொத்தம், 43 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகள், கடந்த பிப்., - மார்ச் மாதங்களில் நடந்தன. கடந்தாண்டுகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே மாதத்தில் வெளியான நிலையில், இந்தாண்டு அடுத்த வாரம் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காரணம், இந்தாண்டு முதல் புதிய கல்விக் கொள்கையின்படி, 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள், தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளும் வகையில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இரண்டாம் தேர்வு எழுதும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த இரண்டாம் தேர்வுகள், அடுத்த மாதம் நடக்க உள்ளதால், இந்தாண்டுக்கான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வில், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரள மாநிலங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த முடிவுகளை, தமிழக மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை, 'cbse.gov.in. results.nic.in, results.digilocker.gov.in, umang.gov.in' ஆகிய இணையதளங்களின் வாயிலாக, தங்களின் பதிவு எண், பள்ளி எண், அனுமதி அட்டை அடையாள எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.
