மத்திய வேளாண் பல்கலைக்கழகம்; செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
மத்திய வேளாண் பல்கலைக்கழகம்; செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 09:34 AM
புதுச்சேரி :
புதுச்சேரியில் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என, செல்வகணபதி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர், ராஜ்யசபாவில், விவசாய பட்ஜெட் விவாதங்களின் போது பேசியதாவது:
இந்தியாவில், கிருஷி விக்யான் கேந்த்ரா எனும் பண்ணை அறிவியல் மையம், முதன் முதலில் தொடங்கியுள்ள மாநிலம் புதுச்சேரி. இந்தாண்டு இந்த நிறுவனம், பொன்விழாவைக் கொண்டாடப் போகிறது.
புதுச்சேரியைத் தொடர்ந்து, அரசாங்கம் 700 கே.வி.கே.,க்களை நாட்டில் நிறுவி உள்ளது. இது இருப்பிடம் சார்ந்த விவசாய தொழில் நுட்பங்களை நிருபிக்கவும், தொழில் நுட்ப மதிப்பீடு, செம்மைப்படுத்தல் மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் விவசாயம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களில் இடம் சார்ந்த தொழில் நுட்ப தொகுதிகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இன்று வரை தென்னிந்தியாவில் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் இல்லை. பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் புதுச்சேரிக்கு ஒரு மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தை தொடங்க வேண்டும்.
இந்த வேளாண் பல்கலைக்கழகம், காரைக்காலில் உள்ள வேளாண்மைக் கல்லுாரியில் தொடங்கலாம். பல்கலைக்கழகம் அமைவதற்கு போதுமான உள்கட்டமைப்புகள் வசதி அனைத்தும் உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசம் மட்டுமில்லாமல் அருகிலுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் பெரிதும் உதவும்.
இவ்வாறு அவர், பேசினார்.