கல்வி நிதியை விடுவிக்க கோரிய வழக்கு மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு
கல்வி நிதியை விடுவிக்க கோரிய வழக்கு மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு
UPDATED : ஆக 13, 2025 12:00 AM
ADDED : ஆக 13, 2025 09:35 AM
புதுடில்லி:
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க உத்தரவிட கோரிய தமிழக அரசின் மனு மீது மத்திய பள்ளி கல்வித்துறை அமைச்சகத்தின் செயலர் சார்பில், வழக்கறிஞர் அடுத்த விசாரணையின் போது ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் பி.எம்.,ஸ்ரீ திட்டத்தினை தமிழக அரசு ஏற்காமல் இருப்பதால், சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 2,291 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பதாகவும், இந்த தொகையை உடனடியாக, 6 சதவீத வட்டியுடன் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தர விட கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த விசாரணை நடக்கும்போது மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் செயலர் தரப்பிலிருந்து வழக்கறிஞர் ஆஜராக வேண்டும்.
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் தமிழக அரசின் வழக்கை விசாரணைக்கு எடுத்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக்கூறிய நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.