UPDATED : ஜூலை 19, 2024 12:00 AM
ADDED : ஜூலை 19, 2024 09:02 AM
கோவை :
குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில், செப்., 10ம் தேதி வரை நடக்கிறது. இதை, தேர்வு எழுதுவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், 2,322 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு, கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
செப்., 14ம் தேதி தேர்வு நடக்கும் நிலையில், இதில் பங்கேற்பவர்களுக்கு, கோவை கவுண்டம்பாளையம் அருகேயுள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில், கடந்த 15ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது.
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் பயிற்சி வகுப்பில், இந்திய அரசியலமைப்பு, வரலாறு, புவியியல், கணிதம், பொதுத் தமிழ், அறிவியல் உட்பட எட்டு வகையான பாடப்பிரிவுகளில், கடந்த காலங்களில், இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு, சிறப்பு பயிற்சி மற்றும் பாடக்குறிப்புகள் வழங்கப்படுகின்றன.
தவிர, போட்டித் தேர்வுகளுக்கென அமைக்கப்பட்டுள்ள நுாலகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதையும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் படித்து குறிப்பெடுத்துக் கொள்ளலாம்.
இந்த பயிற்சி வகுப்பில், இதுவரை 75 பேர் இணைந்து பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி வகுப்பு, செப்., 10ம் தேதி வரை நடத்தப்படுவதால், விருப்பம் உள்ளவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 94990 55937.