பள்ளி மாணவர்களுக்கு ஜனநாயகம் பாடம் எடுத்த முதல்வர் சித்தராமையா
பள்ளி மாணவர்களுக்கு ஜனநாயகம் பாடம் எடுத்த முதல்வர் சித்தராமையா
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 06:00 PM
பெலகாவி:
பெலகாவி கூட்டத்தொடரை காண வந்த பள்ளி மாணவர்களுக்கு, அனுபவ மண்டபம் குறித்து முதல்வர் சித்தராமையா விளக்கினார்.
பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. சட்டசபை, மேல்சபை நிகழ்வுகளை காண, பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தினமும் வருகின்றனர். அதுபோன்று, நேற்று தட்சிண கன்னடா மாவட்டம், கடபாவின் பிலினிலே கிராமத்தில் உள்ள கைகம்பா அரசு துவக்க பள்ளியின் 33 மாணவர்கள், கல்வி சுற்றுலா வந்திருந்தனர்.
முதலில் சபாநாயகர் காதரை சந்தித்த மாணவர்கள், அவருடன் கலந்துரையாடினர். பின், அவரின் முன்மேஜையில் இருந்த அரசியலமைப்பின் முன்னுரையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதை கவனித்த சபாநாயகர், முதல்வரை சந்திக்க நடவடிக்கை எடுத்தார். அவரை சந்தித்த மாணவர்கள், அரசியலமைப்பின் முன்னுரையை பார்த்தது குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆச்சர்யமடைந்த முதல்வர், மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டினார்.
பின், 12ம் நுாற்றாண்டில் ஜனநாயகம் என்ற கருத்தில் உருவான அனுபவ மண்டபம் குறித்து, மாணவர்களுக்கு முதல்வர் விளக்கினார். ஜாதி, வர்ணம், மூடநம்பிக்கை, புரளியை நம்ப வேண்டாம் என பசவண்ணர் கூறியதை, மாணவர்களிடம் சித்தராமையா விளக்கினார்.