UPDATED : செப் 11, 2026 05:17 AM
ADDED : செப் 11, 2026 05:17 PM
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தை பயன்படுத்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு, 2026 - 27ம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடுள்ள கல்வி நிறுவனம் (100 சதவீதம் தேர்ச்சி); பள்ளிகளில் நடப்பாண்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும், தமிழகத்தை சேர்ந்த தகுதியான மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https:// Scholarships.gov.in) கல்வி உதவித்தொகை திட்டத்தை பெற விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில், கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக ஒரு ஆண்டுக்கு, அதிகபட்சமாக, 9 முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, 75 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு வழங்கும்.
திட்டத்தின் நிபந்தனைகள்
இந்த திட்டத்தில், கடந்த நிதி ஆண்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் அல்லது சீர் மரபினர் பிரிவை சேர்ந்தவர்களின், குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
2025 - 26ம் கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும்.
புதுப்பித்தல் முறை
இத்திட்டத்தில், கடந்த நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ, மாணவியர்கள் நட்பாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு விண்ணப்பத்தினை, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து, இம்மாதம், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் சரி பார்க்க வேண்டும்.
2026 - 27ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 தகுதியுள்ள மாணவர்களுக்கு விண்ணப்பத்திற்கான தேதி இணையதளத்தில் அறிவிக்கப்படும். இத்தகவல், மாவட்ட நிர்வாகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
