UPDATED : ஏப் 25, 2026 11:36 AM
ADDED : ஏப் 25, 2026 11:37 AM
புதுச்சேரி:
அரியூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு களிமண் பொம்மை செய்வது குறித்து கைவினை கலைஞர் முனுசாமி பயிற்சி அளித்தார்.
புதுச்சேரியில் புவிசார் குறியீடு பெற்ற 'டெரக்கோட்டா' சுடு களிமண் சிற்பக்கலை பாரம்பரியக் கலையாக உள்ளது. இந்த கலையை பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி கடந்த 37 ஆண்டுகளாக வில்லியனுார் பகுதியில் பயிற்சி கூடம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான களி மண்ணால் பொம்மைகள் செய்வது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
முகாமிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார். கைவினை கலைஞர் முனுசாமி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு களிமண் பொம்மைகள் செய்யும் பயிற்சி அளித்தார்.
இதில், விலங்குகள், பாரம்பரிய கலைப் பொருட்கள், பறவைகள், சாமி சிலைகள், கடல் வாழ் உயிரினங்கள் என பல்வேறு பொம்மைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஆசிரியர் வளர்மதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
