சி.எம்., ட்ராபி பதிவுக்காக அரசுப்பள்ளிகளுக்கு நெருக்கடி: உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் குமுறல்
சி.எம்., ட்ராபி பதிவுக்காக அரசுப்பள்ளிகளுக்கு நெருக்கடி: உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் குமுறல்
UPDATED : ஆக 09, 2025 12:00 AM
ADDED : ஆக 09, 2025 08:29 AM
மதுரை:
சி.எம்., ட்ராபி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையில் 50 சதவீத அளவிற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என நெருக்கடி தருவதாக அரசுப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் குமுறுகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் இந்தாண்டு ஆக.,22 முதல் மாவட்ட, மண்டல, மாநில அளவில் சி.எம்., ட்ராபி போட்டிகள் நடக்க உள்ளன. பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காண்பிக்க வேண்டும் என்று அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து அரசுப் பள்ளிகளுக்கு ஒரு தலைமையாசிரியரை பொறுப்பாளராக நியமித்து அழுத்தம் தருவதாக அரசுப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.
அவர்கள் கூறியதாவது:
சி.எம்., ட்ராபிக்காக ஒவ்வொரு பள்ளியிலும் 50 சதவீத மாணவர்கள் அனைத்து வித போட்டிகளிலும் பங்கேற்பதற்காக பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தந்த பள்ளிகளில் இருந்து மாவட்ட, மண்டல சி.எம்.ட்ராபி போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு பயணப்படி தருவதில்லை. மாணவர்கள் பள்ளிச் சீருடையில் செல்வதால் பஸ் பயணம் இலவசமாகிறது. உணவுச் செலவுக்கு நாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களிடம் மதிப்பெண் சான்றிதழ் வாங்கி ஒவ்வொருவரின் பெயரையும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். மாணவர்களிடம் சான்றிதழ் கேட்டு வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.
விளையாட்டு நிதியில்லை பள்ளிக்கல்வித்துறையில் பல ஆண்டுகளுக்கு முன்பாக விளையாட்டு நிதி என்று தனியாக ஒதுக்கப்பட்டதால் அதை முழுமையாக விளையாட்டுத்துறைக்கு செலவிட முடிந்தது.
இப்போது பொதுநிதி என்ற பெயரில் வருவதால் பள்ளி நிர்வாகம் மனது வைத்தால் தான் விளையாட்டுகளுக்கு செலவிட முடியும். 3வது ஆண்டாக சி.எம்., ட்ராபி போட்டிக்காக கைக்காசை செலவழித்தோ அல்லது ஸ்பான்சர் கேட்டோ செலவு செய்கிறோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மொத்த பரிசுத்தொகை ரூ.87 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மாணவர்களின் பயணப்படி, உணவுச் செலவுக்கு நிதி ஒதுக்கினால் சிரமமின்றி மாணவர்களை அழைத்து வரமுடியும்.
பதிவு தான் முக்கியம் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் பாதியளவு மாணவர்கள் சி.எம்.ட்ராபி போட்டிக்கு பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை, பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கின்றனர். இந்த நெருக்கடியை தளர்த்தி தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே சி.எம்.ட்ராபி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றனர்.